03/05/2024
" மருத நிலத்தில் ஒரு பறவை இருந்தது. அதன் பெயர் 'அசுணமா' இசைக்கு மயங்கும் பறவை அது. கூடல்வாசிகள் வைகைக் கரையில் அமர்ந்து மாலைப்பொழுதில் சிறு யாழ் மீட்டி மகிழ்ந்திருப்பர். அசுணமா சிற்றொலி எழுப்பியபடி நாணல்களுக்குள் இருந்து ஒவ்வொன்றாகப் பறந்து வரும். யாழ் இசைக்கப்பட்டுக்கொண்டே இருக்க, இசைப்பவனைச் சுற்றி அசுணமா வந்து இறங்கும். கொன்றை மரக்கிளையால் செய்யப்பட்ட யாழையே கூடல்வாசிகள் மீட்டுவர். அசுணமா, கொன்றை மரத்தில் மட்டுமே அடையக்கூடிய பறவை. யாழின் இசை செவியிலும் கொன்றையின் வாசனை நாசியிலும் ஏற, அசுணமா இறங்கி, அந்த இடத்திலேயே அடையத் தவிக்கும். நேரம் ஆக ஆக அது இசைப்பவனை நெருங்கும். பின்னர், அவன் மேலே ஏறத் தொடங்கும். அவனது தோள், கால், கை என எங்கும் சிற்றீசல்போல் மொய்க்கத் தொடங்கும். மயங்கிய அசுணமா, இசைப்பவனோடு கொஞ்சும்; தனது சிறு அலகால் அவனது கூந்தலைக் கோதும்.
மலரின் இதழ் விரிவதற்காக, அவற்றுக்கு எதிரே பறந்தபடியே காத்திருக்கும் தேனீக்கள் போல, இசைப்பவனின் இமைக்கு நேரே இறக்கைகளை அசைத்தபடி அது தள்ளாடித் தள்ளாடி மிதக்கும். இசைப்பவன் அதைக் கண்டு சிரித்துக்கொண்டே யாழ் மீட்டுவான். அந்த சிரிப்பைத் தனது அலகால் கொத்த அவனது இதழை முட்டும். அதன் கொஞ்சலில் இருந்து விடுபட முடியா இசைஞன், இரவெல்லாம் யாழ் மீட்டிக்கிடப்பான்"
வேள்பாரி
நூலிலிருந்து.