20/02/2026
சார்பதிவகத்தில் தடை மனு எப்படி வழங்கவேண்டும்.
1) உங்களுக்கு உரிமை இருக்கிற அல்லது உரிமை பட்டம் இருக்கிற அல்லது உரிமையில் ஒரு கூறு இருக்கிற பங்கு இருக்கிற ஒரு சொத்தை வேறு யாரோ போலி ஆவணங்கள் அல்லது தவறான ஆவணங்கள் மூலமோ ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ நீதிமன்றம் வங்கி வருவாய் துறை போன்ற வேறு ஏதாவது அமைப்பகள் மூலம் உருவாக்கப்பட்ட ஆவணங்கள் மூலமோ புதிதாய் பத்திரங்கள் உருவாக்கி மேலும் சட்ட குழப்பங்கள் உருவாக்கும் நோக்கில் பத்திரப்பதிவு செய்ய தாக்கல் செய்வார்கள் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் அதனை தடுத்து நிறுத்த சார் பதிவாளருக்கு உங்கள் தரப்பு நியாயத்தை எழுதி தடை மனு என்று எழுதிக் கொடுக்கலாம்.
2) தடை மனுவில் சொத்து விவரங்களை தெளிவாக எழுதி அதற்கான உங்கள் தரப்பு உரிமைக்கான ஆவணங்களை இணைத்து எதிர்தரப்பினர் பத்திர பதிவு தாக்கல் செய்வதை ஆட்சேபித்து மனு எழுதி அதனை நேரில் கொடுக்க வேண்டும். சார்பதிவாளரை சந்தித்து நேரடியாக முறையிட வேண்டும்.
3) பிறகு அன்றைக்கு மாலையே பதிவு தபாலில் அதே மனுவை சார்பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். நேற்று நேரடியாக வந்து பேசி மனு கொடுத்த நபர் இன்று பதிவு தபால் அனுப்பி இருக்கிறார் என்று சார்பதிவாளர் மனசில் பதிய வைக்க வேண்டும்.பிறகு அனுப்பிய பதிவு தபாலுக்கான அத்தாட்சியை திரும்பப் பெறுதல் வேண்டும் .
4) பிறகு தபால் அனுப்பிய அத்தாட்சியை (acknowledgement card) எடுத்து கொண்டு மீண்டும் நேரடியாக சார்பதிவாளரை சந்திதித்து உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லி பத்திரபதிவு தாக்கலுக்கு தடை சொல்ல வேண்டும்.
5) ஆக இரண்டு முறை நேரடியாக சந்தித்து ஒரு முறை மனு ,ஒரு முறை தபாலில் திரும்பி வந்த அத்தாட்சி அட்டை காட்டி சார்பதிவாளரிடம் பேசி இருக்கிறீர்கள்.நீங்கள் சென்ற இரண்டு நாளுக்கு இடையில் ஒருநாள் உங்கள் பதிவு தபால் உங்களை உங்கள் விஷயத்தை நினைவு ஊட்டி இருக்கிறீர்கள்.
6) சார்பதிவாளர் அதிக கூட்டத்தில் நெருக்கடியாக இருக்கும் போது அவசர அவசரமாக உங்கள் வேலையை முடிக்கும் நோக்கில் இந்த காரியத்தை செய்ய கூடாது.ஆற அமர நின்று நிதானமா விளையாட வேண்டிய விளையாட்டு இந்த தடை மனு விளையாட்டு.
7) சிலர் சார்பதிவாளரிடம் எரிச்சலை ஏற்படுத்தும் படியும் அதிகார ஆணவமாகவும் அல்லது புலம்பி அழுதும் ஓலமிட்டும் முறையிடுவர் அவையெல்லாம் தேவையில்லாதது சார்பதிவாளர் ஒரு நடுநிலையான அதிகாரி என்ற எண்ண ஓட்டத்திலேயே அவரிடம் பேசுங்கள்.
8) மேற்படி தடை மனுவை சார் பதிவாளர் அதிக வேலைப்பளுவிலோ அல்லது வேண்டும் என்ற காரணத்தினாலோ அல்லது தெரியாமலோ எதிர்தரப்பை விசாரிக்காமல் காலம் தாழ்த்தலாம்.
9) அப்படி காலம் தாழ்த்தி இழுத்து கொண்டு இருந்தால் கொடுக்காமல் இருந்தால் நீங்கள் மீண்டும் ஒரு நினைவு ஊட்டல் கடிதம் நேரடியாகவும் பதிவு தபால் மூலமும் அனுப்ப வேண்டும். தபாலில் வந்த அத்தாட்சி அட்டையை வைத்து மீண்டும் சார்பதிவாளரை சந்திக்க வேண்டும்(இந்த வேலையில் எல்லாம் சலிக்கவே கூடது காரியம்தான் முக்கியம்)
10) இரண்டாவது அனுப்பும் நினைவூட்டல் கடித்த்தில் பத்திரப்பதிவு துறையின் சுற்றறிக்கை கோப்பு எண் 46 44 5 / c1 2010 என்ற சுற்றறிக்கையின் படி விசாரக்க வேண்டும் என்ற வசனம் குறிப்பிட்டு இருப்பது மிகுந்த பயனை தரும்.
11) சார் பதிவாளர் உங்களுடைய எதிர்த்தரப்பினருக்கும் தங்களுக்கும் அழைப்பாணை அனுப்பி உடனடியாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி எதிர் தரப்பினருக்கு ஆவணங்கள் சாதகமாக இருக்கிறது என்று சார்பதிவாளர் நம்பினால் அவர் பத்திரத்தை போடுவர் .சார்பதிவாளர் மன நிறைவு அடையாமல் இருக்க வேண்டியது நீங்கள் சொல்லும் காரணத்தில் இருக்கிறது.
12. உங்களுக்கு ஆவணங்கள் சாதகமாக இருக்கிறது என சார்பதிவாளர் உணர்ந்தால் மனநிறைவு அடைந்தால் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவார். சார்பதிவாளர் பத்திரபதிவு மறுத்து விட்டார் என்றவுடன் நீங்கள் மனநிறைவு அடைந்து விடாதீர்கள்.
13) பதிவு மறுத்ததற்கான காரணத்தை விரைவிலேயே சார்பதிவக புத்தகம் இரண்டில் எழுதி விட வேண்டும்.அந்த எழுதுற சாங்கியம் முடிந்துவிட்டதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
14) இரு தரப்பு விசாரணையின் போதும் விசாரணைகளை தொகுத்து சார்பதிவாளரின் முடிவை எழுத்துபூர்வமாக அறிக்கையாக இரண்டு தரப்பிற்கும் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் தடை மனு கோரிக்கை முற்று பெற்றது என்று ஆகும்
15) தடை மனு சார்பதிவாளர் வாங்குவார் விசாரணை நடத்துவது இல்லை. இறுதி முடிவை எழுத்தால் உங்களிடம் கொடுப்பது இல்லை புத்தகம் 2 ல் பதிவதுல்லை இது போன்ற மனுக்களுடன் வந்தாலே அன்றைய சார்பதிவாளரின் நேரத்தை வருவாயை கெடுக்க வந்த நபராகவே உங்களை பார்க்கிறார்களா ?
16) வில்லங்கமான நபராகவே உங்களை பற்றி பார்க்கிறார்கள் என்று உணர்ந்தால் கொஞ்சம் சமூகத்தில் நற்பெயருடன் விளங்குபவர் அல்லது வழக்கறிஞர் துணை மூலம் இந்த தடை மனுவை கொடுக்கலாம்.
17) மேற்படி தடை மனுவை மாவட்ட பதிவாளருக்கும் பதிவு தபாலில் அனுப்பி அத்தாட்சி வந்தவுடன் நேரடியாகவும் சென்று முறையிடலாம் அவருக்கு கீழ் உள்ள சார்பதிவாளருக்கு அவர் நடவடிக்கை எடுக்க சொல்லி பேச வைக்கலாம்..!
Adv சரவணன் மா வழக்கறிஞர்
மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தென்காசி