16/05/2026
#டெண்டர்_முறைகேடு
அரசாங்கப் பணிகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், ஆரோக்கியமான போட்டியின் மூலம் மக்களின் வரிப்பணத்தைச் சேமிக்கவும் உருவாக்கப்பட்டதே டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) முறை.
ஆனால், அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு, சட்டத்தில் இருக்கும் துவாரங்களைப் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமாக ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்தும் அதிகாரத்துவத்தின் உச்சகட்ட அவலமே இந்த "லிமிடெட் டெண்டர்" (Limited Tender) முறைகேடுகள்.
கடந்த ஐந்து ஆண்டு காலமாகத் தொடர்ந்து அரங்கேறி வரும் இந்த அவலம், வெறும் பண இழப்பைத் தாண்டி, தரமற்ற உள்கட்டமைப்புகளால் மக்களின் உயிரைப் பறிக்கும் கொடூரமான ஆயுதமாக மாறியிருக்கிறது.
மண்ணில் விழுந்த 'பாக்ஸ் டெண்டர்' - முளைத்த 'லிமிடெட் டெண்டர்'
கடந்த காலங்களில் பெட்டிக்குள் டெண்டர் படிவங்களைப் போடும் 'பாக்ஸ் டெண்டர்' முறையில் முறைகேடுகள் மலிந்து கிடந்தன.
அறப்போர் இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் மற்றும் அப்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் முயற்சியால், 25 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பணிகளுக்கு 'இ-டெண்டர்' (E-Tender) கட்டாயமாக்கப்பட்டது.
இது ஊழல்வாதிகளின் கமிஷன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டது. டிரான்ஸ்பார்மர் ஊழல் போன்ற பெருமளவு முறைகேடுகள் ஆன்லைன் டெண்டர் முறையால்தான் வெளிச்சத்திற்கு வந்தன,
தற்போதைய சிபிஐ விசாரணைக்கும் வழிவகுத்தன.
ஆனால், ஊழல் அதிகாரிகள் இதற்கும் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தார்கள்.
புயல், வெள்ளம், இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில், சில குறிப்பிட்ட நிறுவனங்களை மட்டும் அழைத்து அவசரமாகப் பணிகளை முடிக்கப் பயன்படும் 'லிமிடெட் டெண்டர்' விதியைத் கையில் எடுத்தார்கள். 50 லட்ச ரூபாய்க்குக் கீழ் உள்ள பணிகளுக்கு மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த முடியும் என்பதால், கோடிக்கணக்கான மதிப்புள்ள பெரிய திட்டங்களை 49 லட்சம், 48 லட்சம் எனப் பல சிறு பகுதிகளாக உடைத்து (Splitting of Tenders) சட்டவிரோதமாக லிமிடெட் டெண்டர்களை விடத் தொடங்கினர்.
இது கடந்த திமுக ஆட்சியின் இறுதிக்காலம் தொடங்கி, தற்போதைய தவெக ஆட்சி வரை ஒரு தொடர்கதையாக நீடிக்கிறது.
மக்களை ஏமாற்றிய பெருங்குடி குப்பைக்கிடங்கு முறைகேடு
இதற்கு மிகச்சிறந்த உதாரணம், சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் எக்ஸ்கவேட்டர் (Excavator) இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க சென்னை மாநகராட்சி அரங்கேற்றிய நாடகம். சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளை, தலா 50 லட்ச ரூபாய்க்குக் குறைவாக 6 தனித்தனி லிமிடெட் டெண்டர்களாகப் பிரித்தார்கள்.
தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களை மட்டும் செட் செய்து, ஒரே நாளில் டெண்டரைத் திறந்து, ஒரே நாளில் மூடினார்கள்.
வாடகைக்குக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு புதிய எக்ஸ்கவேட்டர்களையே வாங்கிவிடலாம் என்ற சூழலில், மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கத் தீட்டப்பட்ட இந்தத் திட்டத்தை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது.
இதன் விளைவாக, சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் (EE) தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, டெண்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி மாநகராட்சியில் லிமிடெட் டெண்டரே கிடையாது என்று ஆணையர் அறிவிக்கும் நிலைக்கு இந்த அவலம் கொண்டு சேர்த்துள்ளது.
பண இழப்பு மற்றும் மக்களின் உயிர் இழப்பு
இந்த ஐந்து ஆண்டு கால லிமிடெட் டெண்டர் முறைகேடுகளால் அரசுக்கு, அதாவது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பண இழப்பு பல நூறு கோடிகளைத் தாண்டும். தகுதியுள்ள, திறமையான, குறைந்த விலைக்குப் பணி செய்யத் தயாராக இருக்கும் நேர்மையான ஒப்பந்ததாரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
அதிக விலைக்கு, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்களை வாரி வழங்குவதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், இதனால் ஏற்படும் மனித உயிர் இழப்புகள். போட்டி இல்லாத காரணத்தாலும், வாங்கும் கமிஷனுக்குக் கைமாறாகவும் தகுதியற்ற நிறுவனங்களுக்குச் சாலை அமைப்பது, பாலம் கட்டுவது, மழைநீர் வடிகால் அமைப்பது போன்ற உள்கட்டமைப்புப் பணிகள் வழங்கப்படுகின்றன.
தரமற்ற முறையில் அவசர அவசரமாகப் போடப்படும் சாலைகள் சில மாதங்களிலேயே பெயர்ந்து போய், குண்டும் குழியுமாக மாறி விபத்துகளை ஏற்படுத்திப் பொதுமக்களின் உயிரைப் பறிக்கின்றன.
முறையான திட்டமிடல் இன்றி, தகுதியற்ற நபர்களால் கட்டப்படும் மழைநீர் வடிகால்களால், மழைக்காலங்களில் மக்கள் தண்ணீரில் மூழ்கியும், திறந்தவெளி மேன்ஹோல்களில் விழுந்தும் உயிரிழக்கும் அவலங்கள் தொடர்கின்றன.
கமிஷன் வாங்குவதற்காகத் தரத்தைக் காவு கொடுக்கும் இந்த டெண்டர் செட்டிங், மறைமுகமாகக் கொலைக் குற்றத்திற்குச் சமமானது.
ஒளித்து வைக்கப்படும் 'ஒர்க் ஆர்டர்' (Work Order)
ஒரு டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு, அந்தப் பணியை யாருக்கு, எவ்வளவு தொகைக்கு, என்னென்ன நிபந்தனைகளுடன் கொடுத்திருக்கிறார்கள் என்ற 'ஒர்க் ஆர்டர்' (Work Order) விவரங்களை முறைப்படி இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அது நிரந்தரமாக மக்கள் பார்வையில் இருக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய சூழலில் பெரும்பாலான ஒர்க் ஆர்டர்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.
தங்கள் பகுதியில் என்ன வேலை நடக்கிறது, அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அதைச் செய்யும் ஒப்பந்ததாரர் யார் என்ற எந்த விவரமும் மக்களுக்குத் தெரிவதில்லை. விவரங்கள் தெரிந்தால் மக்கள் கேள்வி கேட்பார்கள், தங்களின் தரமற்ற வேலை அம்பலமாகிவிடும் என்ற பயத்தினாலேயே அதிகாரிகள் இந்தத் தகவல்களை ஒளித்து வைக்கிறார்கள்.
மாற்றத்திற்கான கோரிக்கை
தற்போது பெருங்குடி எக்ஸ்கவேட்டர் டெண்டரில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே. தமிழகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் இந்த லிமிடெட் டெண்டர் என்ற அவலத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் அனைத்து டெண்டர்களும், அவற்றின் ஒர்க் ஆர்டர்களும் வெளிப்படையாக இணையதளத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடி, அவர்களின் உயிரோடு விளையாடும் இந்த ஊழல் நெட்வொர்க்கை வேரறுக்க வேண்டிய கடமை தற்போதைய அரசுக்கு இருக்கிறது. தவறு செய்யும் அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கத்தோடு தப்பிவிடக் கூடாது, அவர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் பாய வேண்டும்.
அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வையும், ஒவ்வொரு ரூபாயையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அறப்போர் தொடரும்!
ஊழலுக்கு எதிரான
வேட்டைத் தொடரும்.
ஊழலுக்கு எதிரான
யுத்தம் இது.